Thursday, August 6, 2009

ஏழு மாதங்களில் 64 வங்கிகள் செயலிழப்பு

'கடுமையான நிதி நெருக்கடி காரணமாக அமெரிக்காவில் கடந்த 7 மாதங்களில் மட்டும் 64 வங்கிகள் செயலிழந்துள்ளன. சராசரியாக மாதத்துக்கு 9 வங்கிகள் அங்கு மூடப்பட்டு வருகின்றன. சர்வதேச பொருளாதார நெருக்கடியில் அமெரிக்கா முழுமையாகச் சிக்கித் தவிப்பதையே இது காட்டுகிறது. இதிலிருந்து மீள அமெரிக்காவுக்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம்' என்று பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

அமெரிக்க வங்கிகளில் கடந்தாண்டே நிதி நெருக்கடி தலை தூக்கத் தொடங்கிவிட்டது. 2008 இல் 25 வங்கிகள் செயலிழந்ததாக அறிவிக்கப்பட்டன. இந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை இப்போதே இரண்டு மடங்குக்கு மேல் அதிகரித்து விட்டது. ஜூலை மாதத்தில் மட்டும் 19 வங்கிகள் மூடப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை செக்யூரிட்டி வங்கியின் கிளைகளாகும்.

இந்த வங்கிகளின் பெரும்பாலானவைகளின் மொத்தச் சொத்து மதிப்புக்கும் வங்கியில் உள்ள வாடிக்கையாளர்களின் பண இருப்புக்குமான இடைவெளி மிகவும் குறைந்து விட்டது. இதனால் சொத்துகளை விற்றால் மட்டுமே வாடிக்கையாளர்களுக்குப் பணத்தை திரும்பக் கொடுக்க முடியும் என்ற பரிதாப நிலைக்கு இந்த வங்கிகள் தள்ளப்பட்டுள்ளன.

கிராம அளவில் செயல்பட்டு வந்த வாட்டர்போர்ட் கிராம வங்கியும் நிதி நெருக்கடியின் பிடியில் இருந்து தப்ப முடியவில்லை.

மிகப் பெரிய வங்கிகளான சிட்டி குரூப், கோல்ட்மென் ஆகியவை கடைசிக் காலாண்டு முடிவில் குறைந்த அளவு இலாபத்துடன் செயற்பட்டுள்ளன. சிறிய மற்றும் நடுத்தர அளவில் செயற்பட்டு வந்த வங்கிகள் அனைத்தும் நிதி நெருக்கடியில் சிக்கி நஷ்டத்தைச் சந்தித்துள்ளன.

இதனால் வரும் காலத்தில் அமெரிக்காவில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கும் என்றும் பொருளாதார நிலைமை மேலும் மோசமடையும் என்றும் தெரிகிறது. அமெரிக்காவில் நிலை இவ்வளவு மோசமாக இருந்தாலும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் வங்கிகள் சிறப்பாகவே செயற்படுகின்றன. இந்தியாவில் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வங்கிகளின் இலாபமும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. சேமிப்புச் சார்ந்த இந்தியப் பொருளாதாரம் தான் இதற்கு முக்கிய காரணம் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Posted by எம்.ரிஷான் ஷெரீப்

No comments: