Wednesday, April 25, 2012

அறிவோம் அரிச்சுவடி!
தயவு செய்து உங்களின் குழந்தைகளுக்காக மொழி கற்பிக்க சிறிது நேரத்தை செலவிடுங்கள் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள்.



ஈ தமிழ் மொழியின் எழுத்துக்களில் ஒன்று. தமிழ் நெடுங்கணக்கில் இது நான்காவது எழுத்து. இது மொழியின் ஒரு ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கும். இவ்வெழுத்தை "ஈகாரம்" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "ஈயன்னா" என்பது வழக்கம்.
"ஈ" யின் வகைப்பாடு
தமிழ் எழுத்துக்களின் உள்ள உயிரெழுத்து, மெய்யெழுத்து என்னும் இரண்டு வகைகளில் ஈ உயிரெழுத்து வகையைச் சேர்ந்தது. ஒலிக்கும் கால அளவின் அடிப்படையில் இது நெட்டெழுத்து எனப்படுகின்றது. நெட்டெழுத்துக்கள் இரண்டு மாத்திரை அளவு ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. இதனால் இவ்வெழுத்தும் இரண்டு மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும்[1]
இனவெழுத்து

எழுத்து ஒலியின் பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் உயிரெழுத்துக்களை இனங்களாகப் பிரிப்பதுண்டு. அது போலவே பொருள், வடிவு என்பவற்றாலும் இனங்கள் பிரிக்கப்படுகின்றன.
இடம், முயற்சி என்பவற்றின் அடிப்படையில் பிரிக்கும்போது ஈ, இ க்கு இன எழுத்தாக அமையும்.
இங்கு, ஈங்கு போன்ற சொற்களில் இகாரத்துக்குப் பதிலாக ஈகாரம் இடம்பெற்றாலும் பொருள் மாற்றம் இல்லாதிருப்பதைக் காணலாம். இதனால் ஈ, இ க்குப் பொருள் அடிப்படையில் இன எழுத்து ஆகிறது.
சொல்லில் ஈகாரம் வரும் இடங்கள்



'ஈ' எழுதும் முறை
தனி ஈ சொற்களில் முதல் எழுத்தாக வரும். க், ச், த், ந், ப், ம், வ் ஆகிய மெய்யெழுத்துக்களுடன் சேர்ந்தும் ஈ சொற்களுக்கு முதலாக வரும் என்கின்றன தொல்காப்பியம், நன்னூல் ஆகிய நூல்கள்[2]. இதிலிருந்து ஙீ, ஞீ, டீ, ணீ, யீ, ரீ, லீ, ழீ, ளீ றீ, ஆகிய எழுத்துக்கள் சொற்களுக்கு முதலாக வருவது மரபல்ல என்பது தெளிவு. எனினும் தற்காலத்தில், பிற மொழிச் சொற்களையோ பெயர்களையோ தமிழில் எழுதுவோர் சிலர் டீ, ரீ, லீ போன்ற எழுத்துக்களும் சொல் முதலாக வரும்படி எழுதுகிறார்கள். டீச்சர், ரீட்டா, லீவு போன்ற சொற்களை இவற்றுக்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். ஈகாரம் தனித்தும் மெய்களுடன் சேர்ந்தும் சொற்களுக்கு இறுதியில் வரும்.
"ஈ" யும் மெய்யெழுத்துக்களும்

ஈ யுடன் மெய்யெழுத்துக்கள் சேர்ந்து ஈகார உயிர் மெய்யெழுத்துக்கள் உருவாகின்றன. மெய்யெழுத்துக்கள் முதலெழுத்துக்களாக இருப்பினும் வரிவடிவங்களில் எழுதும்போது மூல வரிவடிவங்கள் அகரத்தோடு கூடிய மெய்யெழுத்துக்களையே குறிக்கின்றன. [3]. இதனால், ஆகார உயிர் மெய்களை வரிவடிவில் குறிக்கும்போதும் அகரமேறிய உயிர்மெய் எழுத்துடனேயே ஈகாரத்தைக் குறிக்கும் சுழியுடன் கூடிய "விசிறி" குறியீட்டையும் சேர்த்து எழுதுவது மரபாக உள்ளது.

18 மெய்யெழுத்துக்களோடும் ஈகாரம் சேரும்போது உருவாகும் உயிர்மெய் எழுத்துக்களையும் அவற்றின் பெயர்களையும் கீழேயுள்ள அட்டவணை காட்டுகின்றது.
மெய்யெழுத்துக்கள் சேர்க்கை உயிர்மெய்கள்
வரிவடிவம் பெயர் வரிவடிவம் பெயர்
க் இக்கன்னா க் + ஈ கீ கீயன்னா
ங் இங்ஙன்னா ங் + ஈ ஙீ ஙீயன்னா
ச் இச்சன்னா ச் + ஈ சீ சீயன்னா
ஞ் இஞ்ஞன்னா ஞ் + ஈ ஞீ ஞீயன்னா
ட் இட்டன்னா ட் + ஈ டீ டீயன்னா
ண் இண்ணன்னா ண் + ஈ ணீ ணீயன்னா
த் இத்தன்னா த் + ஈ தீ தீயன்னா
ந் இந்தன்னா ந் + ஈ நீ நீயன்னா
ப் இப்பன்னா ப் + ஈ பீ பீயன்னா
ம் இம்மன்னா ம் + ஈ மீ மீயன்னா
ய் இய்யன்னா ய் + ஈ யீ யீயன்னா
ர் இர்ரன்னா ர் + ஈ ரீ ரீயன்னா
ல் இல்லன்னா ல் + ஈ லீ லீயன்னா
வ் இவ்வன்னா வ் + ஈ வீ வீயன்னா
ழ் இழ்ழன்னா ழ் + ஈ ழீ ழீயன்னா
ள் இள்ளன்னா ள் + ஈ ளீ ளீயன்னா
ற் இற்றன்னா ற் + ஈ றீ றீயன்னா
ன் இன்னன்னா ன் + ஈ னீ னீயன்னா
வரிவடிவம்

தமிழில் ஈகார ஒலியைக் குறிக்கும் வரிவடிவம் இப்போதுள்ளவாறே எப்போதும் இருந்ததில்லை. ஏறத்தாழ கிமு மூன்றாம் நூற்றாண்டில் இருந்து பல்வேறு காலகட்டங்களிலும் தமிழில் ஈகாரத்தைக் குறிக்கப் பயன் பட்ட வரிவடிவங்கள் பற்றிய தகவல்கள் அவ்வக்காலத்துக் கல்வெட்டுக்கள் மூலம் தெரியவந்துள்ளன. சில காலங்களில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வரிவடிவங்கள் பயன்பட்டதற்கான சான்றுகளும் உண்டு. கிமு மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர் தமிழை எழுதுவதற்கு தமிழ்ப் பிராமி, வட்டெழுத்து, தமிழ் எழுத்து ஆகிய எழுத்துக்கள் பயன்பட்டுள்ளன.


ஈகாரம் பல்வேறு மொழிகளிலும் பொதுவாக உள்ள ஒரு ஒலி. தென்னிந்திய மொழிகளிலும் சில அயல் மொழிகளிலும் ஈகாரத்தின் வரிவடிவம் எவ்வாறு உள்ளது என்பதைக் கீழுள்ள படம் காட்டுகிறது. பிராமி இந்திய மொழிகள் பலவற்றின் எழுத்து முறைகளுக்கு அடிப்படை என்னும் கருத்து உள்ளதாலும், பல தென்னிந்திய மொழிகளினதும், [[சிங்களம்}} முதலிய அயல்நாட்டு மொழிகளினதும் வரிவடிவங்கள் கிரந்தத்தை அடிப்படையாகக் கொண்டவையாகவும் இருப்பதால் பிராமி, கிரந்தம் ஆகியவற்றின் ஈகாரத்துக்கான வரிவடிவங்கள் ஒப்பீட்டுக்காகத் தரப்பட்டுள்ளன.


(வாசகர் கருத்து:நன்று. ஆனால், கல்வெ ட்டு வடிவ வளர்ச்சியைக் கொண்டு வரி வடிவ வளர்ச்சியைக் கூறுவது தவறு.
ஏனெனில், ஓலைச் சுவடிகளில் இப் போதைய எழுத்து முறையே (மிகச் சிறு வேறுபாடுகளுடன்
இருந்தமையால் தான் காலங் காலமாகப் படி யெடுத்து வந்தனர். எனவேதான் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல் காப்பியம் முதலான இலக்கிய நூல்களை நம்மால் இன்றும் படிக்க முடிகின்றது. பல இடங்களில் இவ்வாறு தவறான வரி வடிவ வளர்ச்சியைக் குறிப்பிடுவதால் பிறர் இதனை மேற்கோளாகக் குறிப்பிட்டுத் தவறான எண்ணத்தையே பரப்புகின்றனர்.-திருவள்ளுவன் இலக்குவனார்)
விக்கிப்பீடியாவில் இருந்து
Engr.Sulthan

No comments: