Sunday, April 15, 2012

இந்திய இராணுவம்: ஊழலில் நம்பர் 1




“இந்திய இராணுவம்” என்றாலே பலருக்கும் பலவும் நினைவுக்கு வரும். பொதுவாகப் பார்த்தால் இந்திய நடுத்தர வர்க்கத்துக்கு தேசப்பற்று நினைவுக்கு வரும்; மேட்டுக்குடி / ஐ.டி துறை இளைஞர்களுக்கு சாகசங்கள் நினைவுக்கு வரும்; வடகிழக்குப் பெண்களுக்கு கற்பழிப்புகள் நினைவுக்கு வந்து ஆத்திரம் தோன்றும்; காஷ்மீரிகளுக்குக்கொலைகள் நினைவுக்கு வந்து வன்மம் தோன்றும்; தண்டகாரண்யக் காட்டின் பழங்குடி மக்களுக்கு மண் பறிபோகும் சோகம் நினைவுக்கு வந்து வீரம் பிறக்கும்; விவசாயம் பொய்த்துப் போன வட மாநிலங்களில் பள்ளி முடித்த இளைஞர்களுக்கு சுட்ட ரொட்டியும் பருப்புக் கூட்டும் வறுத்த கறியும் நினைவுக்கு வந்து ஏக்கம் பிறக்கும்; மொழி-இன வேறுபாடு இல்லாமல் மொக்கைகளுக்கு மலிவான மிலிட்டரி சரக்கு நினைவுக்கு வந்து எச்சிலூறும்..
பிறருக்குத் தோன்றுவதிருக்கட்டும் – அதே இராணுவத்தின் மேல் மட்டத்திலிருந்து கடைநிலைவரை உள்ள அதிகாரிகளுக்கு தாம் பணிபுரியும் பிரம்மாண்டமான இயந்திரத்தைப் பற்றி என்ன மாதிரியான சித்திரம் இருக்கும்?

அது என்னவென்பதைப் புரிந்து கொள்ள அவர்கள் வாழ்க்கையையும் அது உத்திரவாதப்படுத்திக் கொடுத்திருக்கும் அதிகார வர்க்கத் தன்மையையும் புரிந்து கொள்வது அவசியம். இராணுவத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவருக்கு சுமார் அறுபத்தோரு வகையான சலுகைகள் வழங்கப்படுகின்றது. துவக்கச் சம்பளமாக மாதம் ரூ 15,600-ல் இருந்து 39,100 வரை வழங்கப்படுகிறது. இது போக, சேவைச் சம்பளம் 6,000, போக்குவரத்து அலவன்சாக 1,600-ல் இருந்து 3200 வரை தரப்படுகிறது, சியாச்சின் போன்ற பகுதிகளில் பணிபுரிய தனியாக மாதம் 14,000, தரமான உணவுப் பொருட்கள் அனைத்தும் மலிவான விலைக்கு, வருடத்திற்கு இரண்டு மாதங்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு, இலவச ரயில் பயணம், குடும்பம் மொத்தத்திற்கும் இலவச மருத்துவம், கண்டோன்மென்ட் பகுதிகளில் மலிவு விலைக்குத் தங்குமிடம், பெருநகரங்களில் சொந்த வீடு வாங்க ஒதுக்கீடு, சீருடைக்கு படி, செருப்புக்கு படி, அதற்குப் பாலீஷ் போட்டுக் கொள்ள படி… ஓய்வு பெற்ற பின்னும் வாழ்நாள் முழுக்க

ஓய்வூதியம், அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு… இன்னும் சொல்லி மாளாது நண்பர்களே.
சுருங்கச் சொன்னால் இராணுவம் என்பது காயடிக்கப்பட்டு நன்றாக ஊதிப் பெருத்த பங்களா நாய். அளவற்ற அதிகாரம், கேள்விகளுக்கப்பாற்பட்ட போலிப் புனிதம், துப்பாக்கியேந்திய வெட்டிப் பெருமிதம், மக்களுக்கு இவர்கள் மேல் இருக்கும் அச்சம், செயலற்ற பலம் – இவை மொத்தமும் சேர்ந்து வழங்கும் ஒருவகை விசேடமான திமிர் – இவையெல்லாம்தான் ஒரு இராணுவ அதிகாரியின் ஆளுமையை தீர்மானிக்கின்றன. 2012-ம் ஆண்டு மட்டும் இந்திய இராணுவத்துக்கான அதிகாரப்பூர்வமான பட்ஜெட் ஒதுக்கீடு ஒரு லட்சத்து என்பத்தெட்டாயிரத்து எழுநூற்றுப் பத்து கோடிகள்(37.65 பில்லியன் டாலர்கள்)..!

இராணுவச் செலவினங்களைப் பொருத்தமட்டில் இந்திய இராணுவம் உலகளவில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. ஆயுத இறக்குமதியைப் பொருத்தவரை இந்தியா உலகளவில் முதலிடத்தில் இருக்கிறது. பிரம்மாண்டமான இராணுவ பட்ஜெட்டின் பெரும்பகுதி புதிய தளவாடங்கள் வாங்கவும், இருக்கும் உபகரணங்களை மேம்படுத்தவும் செலவிடப்படுகிறது. 2007 – 2012 கால அளவில் மட்டும் சுமார் 50 பில்லியன் டாலர்கள் புதிய தளவாடங்கள் வாங்க செலவிடப்பட்டதாக சுயேச்சையான மதிப்பீடு ஒன்று கூறுகிறது.

முன்பே குறிப்பிட்ட கேள்விகளுக்கப்பாற்பட்ட அளவற்ற அதிகாரமும் அதிகாரத் திமிரும் உள்ள ஒரு இடத்தில் இப்படி வரைமுறையின்றி நிதியைக் குவித்தால் என்னவாகும்? இதைத் தான் சமீபத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகள் தண்டோரா போட்டு உலகத்துக்கு அறிவிக்கின்றன.

இராணுவத் தலைமை தளபதி வி.கே. சிங்

மார்ச் 25-ம் தேதியிட்ட இந்துப் பத்திரிகையில் இராணுவத்தின் தலைமைத் தளபதி வி.கே சிங்கின் பேட்டி ஒன்று வெளியாகிறது. அதில், சுமார் ஒரு வருடத்திற்கு முன் அவரது சக அதிகாரி ஒருவர் (பின்னர் இது லெப்டினென்ட் ஜெனரல் தேஜிந்தர் சிங் என்று உறுதிப்படுத்தப்பட்டது), 600 இராணுவத்திற்கான மாறுபட்ட புவியியல் பரப்பிலும் இயங்கங்கூடிய கனரக வாகனங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை முடக்காமலிருக்க 14 கோடிகள் லஞ்சமாக அளிக்க முன்வந்தார் என்றும், மேற்படி வாகனங்கள் தரமற்றதென்றும் குறிப்பிடுகிறார். தற்போது அதே கம்பெனியைச் சேர்ந்த சுமார் 7000 வாகனங்கள் இராணுவத்தின் பயன்பாட்டில் இருக்கின்றது. இப்படி தலைமைத் தளபதியிடமே லஞ்ச பேரம் பேசும் சூழல் இராணுவத்தில் உண்டானது குறித்து அவர் குறிப்பிடும் போது, “எங்கோ எப்படியோ நமது தரம் தாழ்ந்து வீழ்ந்து விட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

உடனே இந்தச் செய்தியைக் கையில் எடுத்துக் கொண்ட தேசிய ஊடகங்கள், இதற்கு மசாலா சேர்க்கும் விதமாக சமீப காலமாய் இராணுவத் தளபதிக்கும் அரசுக்கும் இடையே அவரது பிறப்புச் சான்றிதழ் குறித்து எழுந்துள்ள உரசல் போக்கோடு சம்பந்தப்படுத்தி, இதை அரசுக்கும் தளபதிக்குமான ‘மானப்’ பிரச்சினையாக ஊதிப் பெருக்கியது. இந்தியளவிலான ஆங்கில ஊடகங்களில் நடந்த விவாதங்களில், அரசும் தளபதியும் லஞ்ச விவகாரத்தை போதிய கவனத்துடன் கையாளவில்லையென்றும், தளபதியும் இது போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை பொதுவெளியில் வைத்திருக்கக் கூடாது என்றும் ஒரு பஞ்சாயத்தை நடத்தி இது சம்பந்தப்பட்ட ஆளுமைகளுக்கிடையேயான ஈகோ பிரச்சினை என்பதாக மட்டும் சுருக்கி விட முயன்றன.

ஆனால் விஷயம் அத்தோடு ஓய்ந்து விடுவதாக இல்லை. இது தொடர்பாக தற்போது வெளியாகியிருக்கும் விவரங்கள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த ஊழல் முறைகேட்டுப் பூதத்தை ‘உசுப்பி’ விட்டுள்ளது. 1986-ம் ஆண்டு செக்கோஸ்லோவாக்கிய நாட்டைச் சேர்ந்த டாட்ரா நிறுவனத்தோடு இராணுவத் தளவாட வாகனங்களை வாங்க இந்திய இராணுவம் ஒப்பந்தம் ஒன்றைக் கையெழுத்திடுகிறது. எண்பதுகளின் இறுதியில் சோவியத் ஒன்றியத்தின் சிதைவு, செக்கோஸ்லோவாக்கியாவையும் விட்டு வைக்கவில்லை. அந்த நேரத்தில் தடுமாறிக் கொண்டிருந்த டாட்ரா நிறுவனத்தை லண்டனைச் சேர்ந்த வெக்ட்ரா நிறுவனம் கையகப்படுத்துகிறது. வெக்ட்ரா நிறுவனம் வெளிநாடு வாழ் இந்தியரான ரவி ரிஷி என்பவருக்குச் சொந்தமானது.

டாட்ராவை இணைத்துக் கொண்ட வெக்ட்ரா, டாட்ரா சிப்பாக்ஸ் என்கிற வர்த்தக நிறுவனம் ஒன்றைத் துவக்குகிறது. டாட்ரா சிப்பாக்ஸ் நிறுவனம் டாட்ரா வாகனங்களின் நேரடி உற்பத்தியாளராகத் தன்னைப் பதிவு செய்து கொள்ளவில்லை. டாட்ராவிடமிருந்து வாங்கி விற்கும் இடைநிலை நிறுவனம் தான் டாட்ரா சிப்பாக்ஸ். இங்கிலாந்து நாட்டின் கம்பெனி விவகாரங்களுக்கான இலாக்காவில் தனது தொழில் நடவடிக்கையாக டாட்ரா சிப்பாக்ஸ் குறிப்பிட்டுள்ளது இது தான் – “ஆன்மீகம் மற்றும் மதம் சார்ந்த சேவைகள்”. அதன் செயல்பாட்டு மூலதனம் (Working Capital) அன்றைய தேதியில் வெறும் 30,000 பவுண்டுகள் தான். வேறு வகையாகச் சொல்லப் போனால், டாட்ரா சிப்பாக்ஸ் ஒரு உப்புமா கம்பெனி.

2003-ம் ஆண்டு வாக்கில் டாட்ராவில் அமெரிக்காவைச் சேர்ந்த டெரக்ஸ் நிறுவனம் பெருமளவு முதலீடு செய்கிறது. பின் 2006-ம் ஆண்டு தனது 80% பங்குகளை ப்ளூ ரிவர் என்கிற நிறுவனத்திற்கு டெரக்ஸ் கைமாற்றி விடுகிறது. ப்ளூ ரிவர் நிறுவனத்தின் நான்கு முக்கிய பங்கு நிறுவனங்கள் – வெக்ட்ரா, சாம் அய்ட், கே.பி.சி ப்ரைவேட் ஈக்விட்டி, மெடாவ்ஹில் மற்றும் ரொனால்ட் ஆடம்ஸ். வெக்ட்ரா, ரஷியாவைச் சேர்ந்த கமாஸ் என்கிற நிறுவனத்துடன் இணைந்து ஹொசூரில் கமாஸ் வெக்ட்ரா என்கிற அசெம்ப்ளி யூனிட்டை நடத்துகிறது.

கமாஸ் வெக்ட்ராவின் 51% பங்குகள் கமாஸிடமும், 49% பங்குகள் வெக்ட்ராவிடமும் உள்ளது. கடந்த 2010 டிசம்பர் மாதத்தில் கமாஸ் BEML நிறுவனத்திடம் ஒவ்வொரு வருடமும் 6000 ட்ரக்குகள் ( 4 X 4) சப்ளை செய்யும் ஒப்பந்தம் ஒன்றைக் கையெழுத்திட்டிருக்கிறது. இந்திய ராணுவம் வெளியிடும் தளவாடக் கொள்முதலுக்கான டெண்டரில் ஒரு பக்கம் வெக்ட்ரா சிப்பாக்ஸ் BEML மூலம் கலந்து கொள்ள அதற்கான போட்டி டெண்டரை கமாஸ் வெக்ட்ரா மூலமாக தாக்கல் செய்து வேறு போட்டி நிறுவனங்கள் போட்டியில் தேர்வாகி விடாதவாறு பார்த்துக் கொண்டு தமது ஏகபோகத்தை நிலைநாட்டியுள்ளனர்.

டாட்ரா சிப்பாக்ஸ் நிறுவனத்துடன் இராணுவத் தளவாடங்கள் பெற இராணுவ அமைச்சகத்தின் கட்டுப்பாட்டுக்குட்பட்ட BEML ( Bharath Earth Movers Limited) 1992-ம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொள்கிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் BEML இராணுவப் பயன்பாட்டுக்கான தளவாடங்கள் வாங்குவதில் மிக முக்கியமான வழிகாட்டி விதிமுறை ஒன்றை அப்போதே மீறியுள்ளது. அதாவது, இந்திய ராணுவத்துக்கான தளவாடம் எதுவானாலும், அதை நேரடி உற்பத்தியாளரிடம் இருந்து தான் இறக்குமதி செய்ய வேண்டும் – மூன்றாம் தரப்பிடம் இருந்து கொள்முதல் செய்யக் கூடாது என்கிற விதி அப்போதே மீறப்பட்டுள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் முக்கிய பங்குதாரரான ஜோஸப் மிஜெஸ்க்கி என்கிற ஸ்லோவாக்கிய தேசத்தைச் சேர்ந்த நபர் நிதி முறைகேடுகளுக்காக சிறை தண்டனை அனுபவித்தவர்.

மேற்படி சந்தேகத்துக்குரிய நிழல்கள் டாட்ரா சிப்பாக்ஸ் நிறுவனத்தின் மேல் இருக்கும் போதே BEML அதனோடான உறவை வலுப்படுத்தும் முயற்சியில் 2003-ம் ஆண்டு காலகட்டத்தில் இறங்குகிறது (அமெரிக்காவின் டெரக்ஸ் வெக்ட்ராவுடன் கைகோர்த்த அதே காலகட்டம்). இந்த புதிய ஒப்பந்தத்திற்கு ஆட்சேபம் தெரிவித்த இராணுவ தளவாடப் பிரிவு டாட்ரா சிப்பாக்ஸ் நிறுவனத்துக்கு விளக்கக் கடிதம் ஒன்றை அனுப்பிவிட்டுப் பின் எந்த முகாந்திரமோ விளக்கமோ இன்றி அந்தக் கடிதத்தைத் திரும்ப வாங்கிக் கொள்கிறது.

டாட்ரா டிரக்

தற்போது சுமார் 7000 டாட்ரா டிரக்குகள் இந்திய ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தரம் குறைந்த இந்த வாகனம் ஒன்றில் விலை சுமார் 1 கோடி. இதன் தரம் பற்றி புரிந்து கொள்ள ஒரு சிறிய உதாரணம் – பொதுவாக இந்தியச் சாலைகளில் ஓடும் வாகனங்களின் ஸ்டியரிங் வலதுபுறத்தில் அமைந்திருக்கும்; ஆனால், டாட்ரா ட்ரக்குகளின் ஸ்டியரிங்கோ இடது புறமாக அமைந்துள்ளது. இதன் காரணமாக இந்த ரக வாகனங்களை நெருக்கடி நேரங்களில் கையாள்வது சிரமமானது. இதைக் கொண்டு ‘தீவிரவாதிகளைத்’ துரத்தி.. பிடித்து.. சண்டை போட்டு… விஜயகாந்த்தால் மட்டுமே முடியும்.
டாட்ராவின் போட்டி நிறுவனமான உரால்ஸ், இதை விட திறன் மிக்க வாகனங்களை 40 லட்சம் ரூபாய்க்கே தர முடியும் என்கிறது ( இதே திறன் கொண்ட வாகனங்களை டாடாவும் அசோக் லைலேன்டு கம்பெனியும் 16-18 லட்சத்துக்கே சந்தையில் விற்று வருகிறது). டாட்ரா டிரக்கின் விலை மட்டுமல்ல, அதில் பயன்படுத்தப்படும் உதிரி பாகங்களும் மிக அதிக விலைக்கு இராணுவம் கொள்முதல் செய்கிறது. உதாரணமாக வெறும் 5,000 ரூபாய்களுக்கு வெளிச்சந்தையில் கிடைக்கும் தார்பாயை 30,000 ரூபாய்க்கு இராணுவத்திற்கு விற்கிறது டாட்ரா.

தேஜிந்தர் சிங் இராணுவ தளபதி வி.கே.சிங்கிடம் லஞ்சம் கொடுக்க முயன்றதாக சொல்லப்படுவது 2010 செப்டெம்பர் மாதம். சுமார் ஒன்றரை வருடங்கள் கழித்து இப்போது தான் அதை வெளியே எடுக்கிறார் வி.கே.சிங். இத்தனை மாதங்களாக இராணுவ அமைச்சரிடம் ‘வாய்ப்பேச்சாக’ சொன்னதைத் தாண்டி நடை பெற்ற ஊழலை அம்பலப்படுத்த ஒன்றும் செய்யவில்லை – சம்பந்தப்பட்ட நிறுவனத்தோடு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்பதோடு வெக்ட்ரா சம்பந்தப்பட்ட நிறுவனங்களை இராணுவத்தோடு பொருளாதார உறவு வைத்துக் கொள்ள தடை விதிக்கவும் ( Blacklist) இல்லை. இதே தளபதி தான் தனது வயதுச் சான்றிதழைத் திருத்தவிலை என

No comments: