Monday, August 6, 2012

நோன்பாளிகளே! - 3 - மீள்பதிவு தொடர்கிறது... 0

அதிரை-நிருபர்-குழு | Saturday, August 04, 2012 | Alaudeen.S , நோன்பாளிகளே , ரமளான்
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!) இந்த தொடரில் உணர்ந்தும், உணராமலும் ஆண் பெண் என்ற வித்தியாசம் இல்லாமல் செய்து வரும் தீமையைப் பற்றி பார்ப்போம்

பெரியத்திரை சின்னத்திரை:
ஒரு காலத்தில் பெரியத்திரையில் வந்த படங்கள் பிறகு வீடியோ கடையில் கணக்கு வைத்து வாரம் ஒன்று எடுத்து பார்த்த நேரம் போய் பிறகு சீடியாக படங்கள் வெளிவந்தது. பிறகு சின்னத்திரையில் உலகத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக என்பதும் போய் இப்பொழுது உங்கள் அபிமான சின்னத்திரையில் மூன்று படங்கள் தொடர்ந்து பார்த்து சந்தோஷமாக இருங்கள் என்ற விளம்பரம். பணம் ஒன்றுதான் குறிக்கோள், மக்களை சிந்திக்க விடாமல் வைத்திருப்பதற்கு போட்டி போட்டுக்கொண்டு இந்த சின்னத்திரை (தொலைக்காட்சி)கள் முன்னனியில் இருக்கிறது.

இணையதளம்:

இணையதளம் ஒரு கடல் இதில் நல்லதை தேடலாம் என்றால் இதிலும் திரும்பிய பக்கமெல்லாம் ஆயிரக்கணக்கில் ஷைத்தான்கள் தலைவிரித்தாடுகின்றன. இப்பொழுது எதற்கும் கஷ்டப்பட வேண்டியதில்லை திருட்டு சீடி என்று அலற வேண்டியதில்லை. என்ன படம் வேண்டும் உடனே டவுன்லோட் செய்து பார்த்துக்கொள்ளலாம்.

நாம் எல்லோரும் ஒரு காலத்தில் சினிமாவை பார்த்தவர்கள்தான். சினிமாவை பார்க்காத யாரும் இருக்க முடியாது. ஆனால் எப்பொழுது நமக்கு இது ஹராம் என்று தெரியவருகிறதோ இதிலிருந்து விலகி விடுவதுதான் நமக்கு நன்மையை பெற்றுத்தரும்.

ஒரு சகோதரர் சொன்னது என் உறவினர் வீட்டுக்கு செல்வது என்றால் எனக்கு கஷ்டமாக இருக்கும். என்னால் அமல் செய்ய முடியாது. அவர்களின் வீட்டில் வெள்ளிக்கிழமை இரவாகிவிட்டால் அமல் பெரிதாக இருக்கும், என்ன பெரிய அமல் படத்தை டவுன்லோட் செய்து பார்ப்பதுதான் அவர்களின் வேலையாம். நான் எவ்வளவோ சொன்னபிறகும் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்று சொன்னார். வல்ல அல்லாஹ் ஹிதாயத் வழங்கட்டும்.

சின்னத்திரை:

குறுந்தொடர், மெகா தொடர் ஓடிக்கொண்டே இருக்கும். தொடர் 10 நிமிடம், விளம்பரம் 20 நிமிடம். சினிமா 2மணிநேரத்தில் முடிந்து விடும். இந்த தொடர்கள் மாதக்கணக்கில் எடுப்பவர்களுக்கே முடிவு தெரியாமல் ஓடிக்கொண்டு இருக்கும். அப்படி என்ன நாட்டுபற்றையும் அறிவு வளர்ச்சியையும் இந்த தொடர்கள் சொல்லிக்கொடுக்கிறது. பட்டியல் போடலாம் மூட நம்பிக்கைகள், எப்படி கொலை செய்வது, கொள்ளையடிப்பது,மாமியார் மருமகளையும், மருமகள் மாமியாரையும் கொடுமை படுத்துவது. அடுத்தவன் மனைவியை கடத்திச்செல்வது இன்னும் இதுபோன்ற கேடுகெட்ட கலாச்சார சீரழிவை கற்றுத்தருபவகைள்தான் இந்த தொடர்கள்.

விளம்பரத்தை பார்த்து தேவையில்லாத பொருள்களை பெண்களை வாங்க வைக்கும் தந்திரமும் இதில் இருக்கிறது ஸ்பான்சர் வியாபாரிகள்தானே. தொடர்களில் மூழ்கி இருக்கும் சகோதரிகள் இதிலிருந்து விலகி தவ்பா செய்து விட்டு உண்மையான மூமின்களாக மாற முயற்சி செய்யுங்கள்.

லாப்டாப் (மடிக்கணிணி):

ஒரு ரூமில் ஐந்து நபர்கள் இருந்தால் ஐந்து பேரிடமும் மடிக்கணிணி. லாப்டாப் நல்லதுக்குத்தான் கண்டுபிடித்தார்கள். ஆனால் இளைஞர்களுக்கு அதிகம் பயன்படுவது சினிமா பார்க்கத்தான். மணிக்கணக்கில் பேசுவதற்கும்தான். சில ரூம்களில் தொடர்ந்து படம் பார்த்துக்கொண்டு இருந்து பிறகு ஸஹர் வைத்து தொழாமல் தூங்குபவர்களும் இருக்கிறார்கள்.

கண்ணால் ஏற்படும் பாவங்கள்:
கண் செய்யும் பாவங்களில் பார்க்கக்கூடாத காட்சிகளும் அடங்கும். நேரடியாக எதையெல்லாம் பார்க்க அனுமதி இல்லையோ அதை நிழற்படங்களாக பார்க்கவும் அனுமதி இல்லை. (உதராணத்திற்கு: அரை குறை ஆடையுடன் வரும் பெண்களை).

முதல் பார்வை சாதாரண பார்வை, இரண்டாவது பார்வை ஷைத்தானின் பார்வை ஆகவே மீண்டும் பார்ப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள் என்பது நபிமொழி.

பெரியத்திரைக்கு அதிகம் யாரும் போவதில்லை. சின்னத்திரை, மடித்திரை(மடிக்கணிணி) இவைகளில் படங்கள், மெகா தொடர்கள் பார்த்துக்கொண்டு இருப்பவர்கள் மார்க்கம் அனுமதிக்காத காரியங்களில் மூழ்கி இருக்கிறோம், மேலும் நமது காரியங்கள் அனைத்தையும் இரண்டு மலக்குகள் பதிவு செய்து கொண்டு இருக்கிறார்கள், நாளை மறுமையில் நமது அமல்கள் அனைத்தும் புத்தக வடிவில் நமது கையில் வல்ல அல்லாஹ் கொடுப்பான் என்பதை மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள்.

நாம் இருக்கும் ரூமில் கேமரா வைத்து கண்காணித்தால் ஒன்று மட்டும்தான் கண்காணிக்கும். வல்ல அல்லாஹ்வோ அவன் நேரடியாக பார்த்துக்கொண்டு இருக்கிறான். வலுவான சாட்சிகளாக மலக்குமார்கள் இருக்கிறார்கள். இதற்கு மேலும் நமது உறுப்புகளும் சாட்சி கூறும். நாம் செய்யும் காரியங்கள் அனைத்தும் பதிவு செய்யப்படுவதால், நாளை மறுமையில் நாம் எதையும் மறைக்க முடியாது.

எனதருமை சகோதர, சகோதரிகளே! நமது தலைவர் நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த வாழ்க்கை நெறியை அழகிய முறையில் கற்று, அழகிய முறையில் கடைபிடித்துஅனைத்துவிதமான ஹராமான காரியங்களில் இருந்து விலகி முடிந்தவரை ஹலாலை பேணி உறுதியான ஈமானுடன் வாழ்வதற்கு நாம் அனைவரும் முயற்சி செய்வோம் இன்ஷாஅல்லாஹ்!.

இன்ஷாஅல்லாஹ் வளரும். . .
S.அலாவுதீன்

வலைச்சுவடிகள்...

--


ALAVUDEEN

No comments: