Wednesday, June 13, 2012

இந்த தொடரில் மனு நீதியை அத்தியாயத்துக்கு அத்தியாயம் – வரிக்கு வரி – வசனத்துக்கு வசனம் அலசும் அதே வேளையில் தலைப்புக்கு தொடர்புடைய சில அசைக்க முடியாத வரலாற்று சம்பவங்களில் தாழ்த்தப்பட்டோருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும் சுட்டிக்காட்டிக்கொண்டே வருவேன். (சுக்கு, மல்லி கலந்த காபிதானே சுவையாக இருக்கும்?)

அவற்றுள் ஒன்று ஆடைகள் பற்றியதும் நடமாட்டம் பற்றியதுமாகும்.


ஒரு காலத்தில் சூத்திரர் என்று ஒடுக்கப்பட்டவர்களுக்கு மேலாடை அணிய உரிமை இல்லை. காலில் செருப்பு அணிய உரிமை இல்லை. சில குறிப்பிட்ட அக்கிரகாரத் தெருக்களில் அவர்கள் நடக்கக் கூடாது. ஆண்கள் தங்களின் உடல் மீது துண்டு போர்த்தினால் எவ்வளவு குளிர் அடித்தாலும் வெயில் அடித்தாலும் “ அவாளைக்” கண்டால் அந்தத் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் தண்டனை. தாழ்த்தப்பட்டோர் மேலே சட்டை போடுவது அரசியல் சட்ட அத்துமீறல் என்பது சில சமஸ்தானங்களில் சட்டமாக்கப்பட்டிருந்ததுதான் வேதனை தரும் தகவல். காலில் செருப்பணிவது கள்ளநோட்டு அடித்த குற்றத்துக்கும் பொதுக்குளத்தில் குளிப்பது அபின், கஞ்சா போன்ற போதைப்பொருள்கள் கடத்தும் குற்றத்துக்கும் இணையானவையாக கருதப்பட்டடன.

இந்த மேலாடைத்தடை சட்டம் – கட்டுப்பாடு தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஆண்களுக்கு மட்டும்தானா? பெண்களுக்கும்தான். பெண்கள் இப்படி மேலாடை அணியாமல் இருப்பது இன்றும் கூட ஆப்ரிக்காவில் சில நாடுகளில் உள்ளது. இதேநிலையில்தான் தாழ்த்தப்பட்ட பெண்கள் இங்கும் நடத்தப்பட்டிருக்கிறார்கள். இதைக்கண்டு வருந்திய ஒரு ஆங்கிலேய ஆட்சியாளரின் மனைவிதான் இன்று பெண்கள் அணியும் ஜாக்கெட்டை வடிவமைத்ததாக கூறுகிறார்கள். இப்படி பெண்கள் மேலாடை இல்லாமல் அலைந்த அருவருப்பான காட்சி கண்டு வருந்திய மாவீரன் திப்பு சுல்தான் தனது ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசங்களில் சாதிப்பாகுபாடு இல்லாமல் அனைத்துப் பெண்களும் மேலாடை அணியவேண்டுமென்று ஆணை பிறப்பித்தார். Thank you Thippu.

அதேபோல் உயர்சாதியினர் வசிக்கும் சில தெருக்களில் தாழ்த்தப்பட்டோர் நடக்க நேரிட்டால் தண்டனை. இந்த சம்பவம்தான் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த வைக்கம் என்ற ஊரில் ஒரு போராட்டத்துக்கு வித்திட்டது. இந்த போராட்டத்தை நடத்தி, தடுக்கப்பட்டிருந்த அக்கிரகாரத்தெருக்களில் தாழ்த்தப்பட்டோரையும் இஸ்லாமியரையும் உடன் அழைத்துச்சென்ற இராமசாமிப் பெரியார் கைது செய்யப்பட்டு - சிறையில் அடைக்கப்பட்டு – ஆங்கில அரசு தலையிட்டு - அந்த தடை நீக்கப்பட்டு விடுதலையுடன் வெற்றி கண்ட காரணத்தால்தான் பெரியார் “ வைக்கம் வீரர் “ என்று அழைக்கப்பட்டார்.

அதேபோல் ஆலயங்களில் பிரவேசிக்கவும் தாழ்த்தப்பட்டோருக்குத் தடை இருந்ததை எதிர்த்து எண்ணற்ற போராட்டங்களை பல அரசியல் தலைவர்கள்- காந்தி உட்பட - நடத்தியே இருககிறார்கள். இவையெல்லாம் ஏன்? பிறப்பிலேயே ஏற்றதாழ்வைக் கற்பித்த மனு நீதியால் அல்லவா?

இந்த நிலைமைகள் இன்றும் கூட முழுக்க முழுக்க மாறிவிட்டனவா என்றால் இல்லை. கிராமங்களில் உணவு விடுதிகளில் இரட்டைக்குவளை முறையும்- தாழ்த்தப்பட்டோருக்கான தடுப்புச்சுவர்களும்- கோயில் திருவிழாக்களில் தேர் இழுக்க உரிமை மறுத்தலும் இன்றும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. முகப்பருவை விரைவில் நீக்கிவிடலாம். மனு நீதி ஏற்படுத்தியது இரத்தப் புற்று நோய்; பிறவிப் போலியோ. இந்த உயர்சாதி வன்கொடுமையின் ஒரு வெளிப்பாடுதான் அண்மையில் அம்பேத்கார் படம் கேலிச்சித்திரமாக பள்ளிப் பாட நூல்களில் இடம் பெற்றதாகும். இந்த பட்டியலில், வாசாத்தியில் தாழ்த்தப்பட்ட பெண்கள் கற்பழிக்கப்பட்டதும், திருக்கோயிலூரில் இருளர் பெண்கள் கற்பழிக்கப்பட்டதும் அடங்கும். இத்தகைய சீண்டல்களும் சேட்டைகளும் ஆரியர்களின் இரத்தத்தில் ஊறியவை.

இந்த அத்தியாயத்தில் நான் கூறப்போவது மனித குலத்தில் பிறந்த- நாகரிகம் படைத்த – பகுத்தறிவு படைத்த எவரும் – எந்நாளும் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம் இந்த மனு நீதியில் சட்டமாக குறிப்பிடப்பட்டுள்ளதைப பற்றியதாகும். இது மனு நீதியின் இரண்டாம் அத்தியாயத்தில் குறிப்பிடப்படுகிறது . CHAPER : TWO 29 TO 32. . இது குலவாரியாக பிறந்த குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவதில் கூட பாகுபாடு கற்பித்த பகுதிகளாகும்..

இதன்படி பூணூல் அணிவிக்கப்படும் முன்பாக ஒரு உயர்சாதியில் பிறந்த ஆண் குழந்தைக்கு Gatakarman என்று அழைக்கப்படுகிற பிறப்புரிமை சடங்கு நடத்தப்பட வேண்டும். இதில்தான் குழந்தைக்கு அதன் தந்தையால் ஒரு சுப நாளில், சுப முகூர்த்ததில், சுப நட்சத்திரத்தில் Namadheya என்று அழைக்கப்படும் பெயர் சூட்டும் விழாவும் நடத்தப்படவேண்டும். இதில் நமக்கு ஒன்றும் பிரச்னை இல்லை. பிறந்த குழந்தைக்கு பெயர் சூட்டட்டும் வாழ்க! வளர்க!

ஆனால் குழந்தைக்கு சூட்டப்படும் பெயர்கள் எப்படி இருக்கவேண்டுமென்று அதிலும் சாதிவாரியாக சில வரையறைகளை மனு நீதி சொல்கிறது. இதில்தான் நமக்கு பிரச்னை.

அதாவது, பிராமணக் குழந்தையின் பெயரின் முதல் பகுதி நல்ல அதிருஷ்டத்தை சுட்டிக்காட்டுவதாக இருக்கவேண்டுமாம்; ஷ்த்ரிய குலத்தில் பிறந்த குழந்தையின் பெயரின் முதல் பகுதி சக்தியையும் வீரத்தையும் குறிப்பிடுவதாக இருக்க வேண்டுமாம்; வைசிய குலத்தில் பிறந்த குழந்தையின் முதல்பகுதி செல்வத்தை காட்டுவதாக இருக்கவேண்டுமாம். ஆனால் சூத்திர குலத்தில் பிறந்த குழந்தையின் முதல் பெயர் express something contemptible அதாவது இழிவானதும், வெட்கப்படத்தகுந்ததுமாக இருக்கவேண்டுமாம். முதல் மூன்று சாதிக்கும் முக்கனி கொடுப்பார்களாம். நாலாம் சாதிக்கு நாறிப்போன நரகலை அள்ளித் தரவேண்டுமாம்.

அதுமட்டுமல்ல பெயரின் இரண்டாவது பகுதியிலும் கூட பிராமணக் குழந்தையின் பெயரில் சந்தோஷமும், ஷத்ரியக் குழந்தையின் பெயரில் பாதுகாப்பு அம்சமும், வைசியக் குழந்தையின் பெயரில் செழிப்பும் இடம்பெற்று இருக்க வேண்டுமாம். ஆனால் சூத்திரக்குழந்தையின் பெயரில் இட்டபணிகளை நிறைவேற்றும் எடுபிடி என்ற அம்சம் இடம் பெற வேண்டுமாம். ஒரு பெரும்பான்மை மக்கள் பின்பற்றும் மதத்தின் சட்டங்கள் இப்படி இருந்தால் எப்படி வரும் சமத்துவம் என்பதை சம்பந்தப்பட்டோர் சிந்திக்க வேண்டும்.


மேலே நான் சாராம்சமாக சுட்டிக்காட்டிய கருத்துக்களைப் பொழியும் மனுவின் வரிகள் இதோ:

29. Before the navel-string is cut, the Gatakarman (birth-rite) must be performed for a male child; and while sacred formulas are being recited, he must be fed with gold, honey, and butter.

30. But let the father perform or cause to be performed the Namadheya (the rite of naming the child) on the tenth or twelfth day after birth, or on a lucky lunar day, in a lucky muhurta (under an auspicious constellation).

31. Let the first part of a Brahmin's name denote something auspicious, a Kshatriya's be connected with power, and a Vaisya's with wealth, but a Shudra's express something contemptible.

32. The second part of a Brahmin's name shall be a word implying happiness, of a Kshatriya's a word implying protection, of a Vaisya's a term expressive of thriving, and of a Shudra's an expression denoting service.
இதனால்தான் இன்றும் கூட உயர்குலத்தில் பிறந்தவர்கள் சூரிய புத்திரன் , சந்திர குமாரன் என்றெல்லாம் பெயர் சூட்டிக்கொள்ளும் வேளையில் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவர்கள் மண்ணாங்கட்டி, ஓணான் குட்டி, மாக்கான் என்றெல்லாம் பெயரிட்டுக்கொள்கிறார்களோ என்கிற சந்தேகம் எனக்கு.

வாணியம்பாடியில் என்னுடன் திண்டிவனம் என்ற பெயருடைய தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த ஒரு நண்பர் பயின்றார். ஏன் இப்படி ஊர் பெயரை வைத்து இருக்கிறாய் என்று கேட்டேன். அவர்கள் குடும்பம் சாலைப்பணியாளர்கள் குடும்பம். ஊர் ஊராகப் போய் சாலைகள் போடுவது அவர்கள் வேலை. எந்த ஊரில் குழந்தை பிறக்கிறதோ அந்த ஊரின் பெயரை பிறக்கும் குழந்தைக்கு வைத்து விடுவார்களாம். இதே போல் எனது வகுப்புத்தோழர் திண்டிவனத்துக்கு மலைக்கோட்டை , பண்ருட்டி , மருங்காபுரி , பனைமரத்துப்பட்டி என்றெல்லாம் சித்தப்பா, பெரியப்பா மக்கள் உண்டாம். (இன்று திரு. திண்டிவனம் கூட்டுறவுத்துறையில் சார் பதிவாளர் பதவி வரை சேவை செய்து ஒய்வு பெற்று விழுப்புரத்தில் வசிக்கிறார். அவர் பெயரில் இருந்த இடக்கு மடக்கு காரணமாக படிக்கும் காலத்தில் அவரை நாங்கள் திவான் என்று நல்ல பெயரிட்டு அழைத்தோம் )

இன்னும் சுழலும் இந்த சாட்டை ...

--
http://ping.fm/Wh5Zn
http://ping.fm/hB0ny
ALAVUDEEN

No comments: