Sunday, January 29, 2012

முஸ்லிம்கள் என்றால் ஏமாளிகளா?

14 Jan 2012


மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி என்றால் இந்தியாவில் வாழும் மிகப்பெரும் சிறுபான்மை சமூகமான முஸ்லிம்களுக்கு எல்லா பக்கமும் அடிதான் விழுந்துக் கொண்டிருக்கிறது.
பாசிச பயங்கரவாதம், அரசு பயங்கரவாதம், ஊடக பயங்கரவாதம் என பல தரப்பட்ட தாக்குதல்களை சந்திக்கும் துயரமான நிலைக்கு முஸ்லிம் சமூகம் தள்ளப்பட்டுள்ளது.

கேரளாவை உலுக்கிய லவ் ஜிஹாத் அவதூறுப் பிரச்சாரம் ஊடகங்களால் தீவிரமாக முன்னெடுத்துச் செல்லப்பட்டது. முஸ்லிம்களின் சகிப்புத் தன்மையை குறித்து கேள்வி எழுப்பிய இச்சம்பவம் ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் கைங்கர்யம் தான் என்பது அண்மையில் வெட்டவெளிச்சமானது.

ஊடகங்களும், நீதிமன்றமும் லவ் ஜிஹாதின் பெயரால் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் மீது பாய்ந்து கடித்து குதறின. சேனல்களில் விவாதங்கள் சூடு பறந்தன. சாதாரணமாக முஸ்லிம்களுக்கு ஆதரவான கருத்தை வெளியிடுபவர்களை கூட சந்தேகத்தின் நிழலில் இச்சம்பவம் கொண்டுவந்து நிறுத்தியது. லவ் ஜிஹாத் பிரச்சாரத்தால் பாதிக்கப்பட்ட சிராஜுத்தீன் தனது தந்தையை இழந்தார், அரசு வேலையை இழந்தார். பாசிஸ்டுகளால் இந்தியாவில் பாதிப்பிற்குள்ளாகும் கிறிஸ்தவர்கள் கூட இந்த அவதூறு பிரச்சாரத்திற்கு துணைபோயினர். ஆனால், உண்மையான திருடன் வீட்டிற்குள்ளே தான் இருக்கிறான் என்பது நிரூபணமான வேளையில் எதுவும் சம்பவிக்கவில்லை. கிட்டத்தட்ட இச்செய்தி பல ஊடகங்களில் மூடி மறைக்கப்பட்டது.

ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கங்கள் லவ் ஜிஹாத் போன்ற சூழ்ச்சிகளையும் சதிவேலைகளையும் புரிவதில் கைத்தேர்ந்தவர்கள் என்பதற்கு ஏராளமான உதாரணங்களை கூற முடியும்.

2006-இல் மலேகான், 2007-ஜனவரியில் அஜ்மீர் தர்கா, 2007-பிப்ரவரியில் சம்ஜோதா எக்ஸ்பிரஸ், 2007-மே மாதம் மக்கா மஸ்ஜித், 2008-இல் மீண்டும் மலேகான் என குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி முஸ்லிம்களை கொலைச் செய்தார்கள் பாசிஸ்டுகள். ஆனால், இத்தாக்குதல்களில் பலியானது முஸ்லிம்கள்தாம், குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டதும் முஸ்லிம்கள்தாம். தற்பொழுது உண்மை வெளியான பிறகும் பல போராட்டங்களுக்கு மத்தியில்தான் இவ்வழக்குகளில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் சிலர் விடுதலையாயினர்.

அண்மையில் கர்நாடகா மாவட்டம் பிஜாப்பூரில் நடந்த சம்பவம் ஹிந்துத்துவாவின் சூழ்ச்சிக்கு போதுமான சான்றாகும். தாசில்தார் அலுவலகத்தில் பாகிஸ்தான் கொடியை ஏற்றிய ஹிந்துத்துவா கயவர்கள் முஸ்லிம்களின் மீது பழியை சுமத்தி கலவரத்தை தூண்ட சூழ்ச்சி மேற்கொண்டதை காவல்துறை கண்டுபிடித்தது. ஆனால், அதற்கு முன்பு இச்சம்பவத்தின் பெயரால் நடத்தப்பட்ட முழு அடைப்பில் முஸ்லிம்களின் வியாபார ஸ்தாபனங்களும் வாகனங்களும் வழிப்பாட்டுத் தலமும் தாக்கப்பட்டன. ஆனால், இச்சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்ரீராமசேனா ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தலிக், இச்சம்பவத்தை நிகழ்த்தியது ஆர்.எஸ்.எஸ்தான் என குற்றம் சாட்டினார்.

போலீஸ் வட்டாரங்கள் அளிக்கும் தகவலின் அடிப்படையில் பாகிஸ்தான் கொடி அரசு அலுவலகத்தில் ஏற்றுவதற்கு பா.ஜ.கவைச் சார்ந்த ஒரு மக்கள் பிரதிநிதி உறு துணையாக இருந்துள்ளார். ஆனால் ஒன்று மட்டும் உறுதி; பா.ஜ.க ஆனாலும், ஆர்.எஸ்.எஸ் ஆனாலும், ஸ்ரீராமசேனா ஆனாலும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக சதித்திட்டத்தை தீட்டி அவர்களை அழித்தொழிப்பதுதான் அனைத்து ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகளின் திட்டமாகும்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் கர்நாடகா மாநிலம் மைசூரில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசலில் பன்றியின் இறைச்சியை வீசி முஸ்லிம்-ஹிந்து சமூகங்களிடையே கலவரத்தை தூண்டினார்கள் ஹிந்துத்துவா பாசிஸ்டுகள்.

ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகளின் பலத்தை நிரூபிக்கும் போட்டிகளுக்கு முஸ்லிம்களே பலிகடாவாக ஆக்கப்படும் வேளையில் முஸ்லிம் இளைஞர்களை போலி என்கவுண்டரில் சுட்டுக் கொல்வது வழக்கமான செய்தியாகிவிட்டது. போலி குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் முஸ்லிம் இளைஞர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு நீண்டகாலம் சிறையில் வாழ்க்கையை தொலைக்கின்றனர்.

பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்து நீண்டகாலத்திற்கு பிறகு விடுதலைச் செய்யப்பட்டு மீண்டும் பொய்வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட உடல்நிலை சீர்கெட்ட ஊனமுற்றவரான அப்துல் நாஸர் மஃதனி நீதிமறுப்பின் இந்திய மாதிரி ஆவார்.

இத்தோடு பாட்லா ஹவுஸில் கொல்லப்பட்ட அப்பாவி இளைஞர்களின் படுகொலையை நியாயப்படுத்தும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் அறிக்கையையும் சேர்த்து வாசிக்கவேண்டும்.

பொது சமூகத்தில் முஸ்லிம் வெறுப்பு அணையாத நெருப்பு ஜுவாலையாக எரிந்துக் கொண்டிருக்கும் வேளையில் ப.சிதம்பரம் தனது தவறை திருத்த வேண்டியதில்லை. ஏனெனில் எல்லோரும் தம் வசதிக்கேற்ப குட்ட குட்ட குனியும் சமுதாயமாக முஸ்லிம்கள் மாறிவிட்டார்கள் அல்லவா?.

முஸ்லிம்களுக்கு எதிரான சதித்திட்டங்கள் ஒவ்வொன்றாக வெளிவரும் வேளையில் அவர்கள் மீது பாய்வதையே குறிக்கோளாக கொண்டுள்ள அறிவுஜீவிகளும், தேசப் பற்றாளர்களும் எங்கே சென்றார்கள்?

அ.செய்யது அலீ.

Source: http://ping.fm/yN6M4

No comments: