Sunday, May 15, 2011

திருப்பூர்: பிளஸ் டூ பொதுத்தேர்வில் 1,136 மதிப்பெண் பெற்றிருந்தபோதிலும் படிக்க வசதி இல்லாததால் பனியன் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார் மாணவி ரேமகாவதி.

மாணவி ரேமகாவதி

திருப்பூரைச் சேர்ந்தவர் மாணவி ரேமகாவதி. பிளஸ் டூ தேர்வு எழுதி முடிவுக்கு காத்திருந்தார். இந்நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் அவரது தந்தை அகால மரணமடைந்தார். பிளஸ் ஒன் படிக்கும் தம்பி, சொற்ப சம்பளத்தில் கூலி வேலை பார்க்கும் தாய் என வறுமை வாட்டியதால் பனியன் கம்பெனி வேலைக்கு செல்லத் துவங்கினார் ரேமகாவதி.

1,136 மதிப்பெண்கள்

இந்நிலையில் தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் ரேமகாவதி 1,200க்கு 1,136 மதிப்பெண்கள் பெற்று தேர்வானது தெரிய வந்தது. நல்ல மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களெல்லாம் தத்தம் பெற்றோருடன் நண்பர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிக் கொண்டிருந்தபோது தன்னுடைய மதிப்பெண்கள் குறித்த தகவலை சக ஊழியர்களுடன் பகிர்ந்து கொண்டு தன் வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார் ரேமகாவதி.

உதவி தேவை

நல்ல மதிப்பெண்கள் எடுத்தும் தொடர்ந்து படிக்க முடியாத நிலையில் உள்ள இந்த மாணவியை பத்திரிகையாளர் சந்தித்தனர். அவர்களிடம் ‘தந்தை இறந்த பின் எங்கள் குடும்பத்துக்கு ஆதரவாக எனது தாயின் சகோதரர் ஜோதிராமன் உள்ளார். அவர் வீட்டில்தான் தற்போது வசித்து வருகிறோம். அப்பாவும் இறந்த நிலையில், குடும்பத்தை காப்பாற்ற நான் சம்பாதித்தே ஆக வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் பனியன் கம்பெனியில் வேலை பார்க்கிறேன். தமிழ் பாடத்தில் 189, ஆங்கிலத்தில் 179, இயற்பியலில் 199, வேதியியலில் 196, கம்ப்யூட்டர் சயின்ஸில் 192, கணித பாடத்தில் 181 என 1,136 மதிப்பெண் பெற்றுள்ளது தெரியவந்தது. ஆனால் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள என் அருமை தந்தை எங்களோடு இல்லை, தொடர்ந்து படிக்க வசதியும் இல்லை. கம்ப்யூட்டர் என்ஜினியராக வேண்டும் என்பதே எனது கனவாக இருந்தது. தற்போதைய சூழலில் அது நிகழ வாய்ப்பில்லை. யாராவது உதவும் பட்சத்தில் நன்றாக படித்து சிறந்த கம்ப்யூட்டர் என்ஜினியர் ஆவேன் என்றார் அவர்.

உதவ விரும்புவோர் கவனத்திற்கு

உதவும் எண்ணம் உள்ள இதயங்கள் 93442 - 00281 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Visit: www.mohamedbunder.tk

No comments: